முன்விரோத தகராறில் வாலிபருக்கு அரிவாள் தாக்குதல்: 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 2 பேரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதிநகரைச் சேர்ந்த முனியசாமியின் மகன் ஞானதிரவியம் (30) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் பாரதிநகர் பகுதியில் ஞானதிரவியத்தை வழிமறித்த கும்பல், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. பின்னர் திடீரென அரிவாளால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாரதிநகரைச் சேர்ந்த செல்லபாண்டியின் மகன் மகாராஜன் (33) மற்றும் முத்துவின் மகன் முத்துராஜ் (25) என்பது தெரியவந்தது.இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.