உணவு கொடுத்த ஆட்டோ டிரைவரை மிதித்துக் கொன்ற யானை - மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ராஜ் நகர் பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவுக்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டது. அந்த யானையை அதன் பாகன் உமேஷ் கோஸ்வாமி, நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அப்போது வழியெங்கும் பொதுமக்கள் யானைக்கு உணவு மற்றும் பணம் வழங்கினர்.அந்த நேரத்தில், 49 வயதான ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஹோல்கர் யானைக்கு வெல்லம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் போது யானை திடீரென அமைதியை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதை கட்டுப்படுத்தும் முயற்சியாக பாகன் உமேஷ், கையில் இருந்த கைத்தடியால் யானையின் தலையில் தட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து யானை ஆக்ரோஷமாக மாறியது.பின்னர், வெல்லம் கொடுத்த விஜய் ஹோல்கரை யானை தரையில் தள்ளி, அவரது வயிற்றுப் பகுதியில் மிதித்தது.
இதைக் கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியபடி சிதறி ஓடினர். இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டது.இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த விஜய் ஹோல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, யானையின் பாகன் உமேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், யானையை நகரப் பகுதிக்குள் அழைத்து வர வனத்துறையின் உரிய அனுமதி பெறப்பட்டிருந்ததா என்பதையும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.