கரூர் கூட்ட நெரிசல்: அரசு வேலை வழங்கிய உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்
கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழங்கிய பணிநியமனங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16-ஆவது பிரிவுகளின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க அனுமதித்தால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிற விபத்துகள் மற்றும் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களும் அதே கோரிக்கையுடன் நீதிமன்றத்தை அணுகும் சூழல் உருவாகும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அரசு தனது நிர்வாக அதிகாரங்களை பயன்படுத்தும் போது, அவை அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வரம்புகளுக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. கட்டுப்பாடுகள் இன்றி நிர்வாக அதிகாரம் பயன்படுத்தப்படுவது சட்டரீதியான குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அரசுப் பணியிடங்கள் விருப்பப்படி வழங்கப்பட வேண்டியவை அல்ல என்றும், தகுதி மற்றும் நடைமுறை விதிகளின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டியவை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
அரசு வேலைக்காக பலர் நீண்ட காலமாக காத்திருக்கும் நிலையில், அந்த பணியிடங்களின் மதிப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்தது.
கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு வேலை பெற்ற குடும்பத்தினரிடம் தகவல் அறிய முயற்சிக்கப்பட்டது. அவர்களில் பலருக்கு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. சிலர், தாங்கள் பணியாற்றும் அலுவலகத்திலிருந்தும் இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.