திருமணம் நிச்சயமான இளம்பெண் நர்ஸ் மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள ஆற்றூர் கல்லுப்பாலம் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின் ராஜின் மகள் ஆஷிகா (22), டிப்ளமோ நர்சிங் படிப்பை முடித்த பின்னர் கடந்த எட்டு மாதங்களாக மார்த்தாண்டம் வெட்டுமணியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார்.ஆஷிகாவுக்கு கடந்த 7-ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.இந்த நிலையில், சம்பவம் நடந்த நாள் காலை வழக்கம்போல் பணிக்காக மருத்துவமனைக்குச் சென்ற ஆஷிகா, இரவு சுமார் 10.30 மணியளவில் மருத்துவமனை மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர்.அங்கு ஆஷிகா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அவர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர்.முதற்கட்ட விசாரணையில், ஆஷிகா மருத்துவமனை மாடியில் நின்றபடி செல்போனில் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு திடீரென கீழே விழுந்த சத்தம் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சத்தம் கேட்டு ஓடி வந்த மருத்துவமனை ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் ஆஷிகா உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டதாகவும், அவரது செல்போன் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.சம்பவம் தொடர்பாக ஆஷிகாவின் தாயார் சுதாராணி (51) மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆஷிகா தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற இரு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மருத்துவமனை மாடியில் இருந்து இளம் நர்ஸ் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.