நீட் விவகாரம்: பிரதமரின் அறிவிப்பு கண்துடைப்பு முயற்சி மட்டுமே என மாணிக்கம் தாகூர் விமர்சனம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், வினாத்தாள் கசிவு வழக்குகளுக்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சி மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளையே மேற்கோள் காட்டிய அவர், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 880 விரைவு நீதிமன்றங்களில் சுமார் 13.9 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஐ.டி.எஸ்.சி. (ITSC) சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டில் 2,45,579 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வு முறையை முறையாக நடத்தத் தவறிய அமைப்பாக இருப்பதாக குற்றம்சாட்டிய மாணிக்கம் தாகூர், மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளையும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.அதன்படி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் மத்திய அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.மேலும், வெறும் வாக்குறுதிகளாலும் அடக்குமுறைகளாலும் இந்திய இளைஞர்களையும் மாணவர்களையும் தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்றும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.