தேனியில் மூதாட்டி கொலை, நகை-பணம் கொள்ளை; வானதி சீனிவாசன் கண்டனம்
தேனி மாவட்டம், தேனி நகரில் இன்று அதிகாலை 60 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முந்தைய திமுக ஆட்சியிலேயே தனியாக வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் இருந்ததாகவும், தற்போது தவெக ஆட்சியில் நிலைமை மேலும் மோசமடைந்து, தனியாக வாழும் முதியவர்களையே கொலை செய்து பணம் மற்றும் நகைகளை பறிக்கும் சம்பவங்கள் நடைபெறுவது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தவெக ஆட்சி மீது மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட 'சிங்கப் பெண் படை' செயல்பாடு போதுமானதாக இல்லை என்றும், சில வழக்குகளில் மட்டும் நடவடிக்கை எடுத்து தங்களது இருப்பை வெளிப்படுத்தும் நிலையிலேயே அந்த அமைப்பு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.எனவே, 'சிங்கப் பெண் படையை' முழுமையாக களமிறக்கி, பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.