தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜூலை 31 முதல் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்: கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூலை 31 முதல் பிராய்லர் கோழி விற்பனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இரு மாநிலங்களிலும் செயல்படும் சுமார் 60,000 கோழி இறைச்சி கடைகளில் பிராய்லர் கோழி விற்பனை நடைபெறாது என்றும், இதனால் கோழிக்கறி தட்டுப்பாடு உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த முடிவு குறித்து தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கோழி வணிகர்கள் இதில் பங்கேற்று, பிராய்லர் கோழி வளர்ப்பு மற்றும் விற்பனை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர்.கூட்டத்தில், பிராய்லர் கோழிகளுக்கான தீவனக் கட்டுப்பாடு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மண்டல மற்றும் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கும் தெளிவாக அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.மேலும், விற்பனைக்காக அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு குறைந்தது 15 மணி நேரத்திற்கு முன்பாக தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விற்பனைக்கு முன்பாக தீவனம் வழங்கப்பட்டால், கோழியின் இறைப்பையில் 100 முதல் 200 கிராம் வரை தீவனமும் தண்ணீரும் தங்கிவிடும் என்றும், வாங்கும் நேரத்தில் சுமார் 150 கிராம் வரை செரிக்காத தீவனம் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் வணிகர்கள் குற்றம்சாட்டினர்.அதேபோல், கோழியை வெட்டி சுத்தம் செய்யும் போது இறைப்பையில் இருக்கும் செரிக்காத தீவனமும் அதனுடன் கலந்த கழிவுகளும் இறைச்சியில் பரவி, அதன் தரம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் சுத்தமான இறைச்சியை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாத சூழல் உருவாகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், ஜூலை 31 முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிராய்லர் கோழி விற்பனையை நிறுத்துவதுடன், கோழி வணிகர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.