கோவை செம்மொழி பூங்கா திட்டம்: ரூ.40 கோடி முறைகேடு புகார் – நடவடிக்கை கோரி வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
கோவை செம்மொழி பூங்கா திட்டப்பணிகளில் சுமார் ரூ.40 கோடி வரை முறைகேடு நடைபெற்றதாக தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் சங்கம் புகார் அளித்துள்ளதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், போலி பில்கள் மூலம் மாநகராட்சி நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலைகளில் மீண்டும் பணிகள் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இந்த விவகாரம் கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலும் விவாதத்துக்கு உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்கள் யார் என்பதை உரிய விசாரணை மூலம் கண்டறிந்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மக்களின் வரிப்பணம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை மீட்க வேண்டும் என தமிழக அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.