கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12 வரை கால அவகாசம்
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 214 திருக்கோவில்களில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷின் வழிகாட்டுதலின்படி, இதுவரை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 9,205 திருக்கோவில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்கும் பணிக்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் உள்ள 214 திருக்கோவில்களுக்கான அறங்காவலர் நியமனத்திற்காக கடந்த ஜூன் 14, 2026 அன்று தமிழ் மற்றும் ஆங்கில முன்னணி நாளிதழ்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பங்களை ஜூலை 22, 2026 மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்று முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் முடிவடையவிருந்த நிலையில், பக்தர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மேலும் அதிகமான தகுதியானோர் விண்ணப்பிக்க வசதியாக, விண்ணப்பங்கள் பெறும் காலக்கெடு ஆகஸ்ட் 12, 2026 மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுடைய மற்றும் விருப்பமுள்ள பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 12, 2026 மாலை 5.45 மணிக்குள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யவோ, அல்லது நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட திருக்கோவில் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.