ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீடு திட்ட குறைகளை நீக்கி திருத்தப்பட்ட அரசாணை வெளியிடவேண்டும் - வேல்முருகன்...
சென்னை: ஓய்வூதியர்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, திருத்தப்பட்ட அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய காப்பீட்டு திட்டத்தில் பல சிகிச்சைகளுக்கான 'பேக்கேஜ்' தொகைகள் போதுமான அளவில் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், இதனால் ஓய்வூதியர்கள் தரமான சிகிச்சையை பெறுவதில் சிக்கல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கண்புரை, ஆஞ்சியோபிளாஸ்டி உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஓய்வூதியர்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஓய்வூதியர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலித்து, திட்டத்தின் குறைகளை நீக்கி, தெளிவான விதிமுறைகளுடன் திருத்தப்பட்ட அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் என்று வேல்முருகன் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.