வினாத்தாள் கசிவுக்கு கடும் நடவடிக்கை: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்; புதிய மசோதாவை தாக்கல் செய்யும் மத்திய அரசு
நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி, மாணவர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, தேர்வு முறைகேடுகளை கட்டுப்படுத்த தற்போது அமலில் உள்ள சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி,பொதுத்தேர்வுகள் (தவறான வழிகளைத் தடுப்பது) சட்டம், 2024-ல் திருத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின் கீழ், வினாத்தாள் கசிவு அல்லது தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும். மேலும், இத்தகைய குற்றங்களுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.அதேநேரத்தில், வினாத்தாள் கசிவை திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக மேற்கொள்வோர் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று மசோதாவில் இடம் பெற உள்ளது.இந்த சட்டத்திருத்த மசோதாவை வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் அது சட்டமாக அமலுக்கு வரும்.மேலும், வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளின் விசாரணை இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மூன்று மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை விரைவாக நடத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் வகையிலும் இந்த மசோதாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.