விக்ரம்-1 வெற்றிக்குப் பிறகு ஸ்கைரூட்டின் புதிய இலக்கு: மாதந்தோறும் ஒரு ராக்கெட் தயாரிப்பு – சிஇஓ பவன் குமார்
புதுடெல்லி:இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட வளர்ச்சி இலக்கை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு விக்ரம்-1ராக்கெட்டை ஏவும் அளவுக்கு உற்பத்தித் திறனை உயர்த்துவதே நிறுவனத்தின் நோக்கம் என்று அதன் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பவன் குமார் சந்தானா தெரிவித்துள்ளார்.விக்ரம்-1 திட்டத்தின் வெற்றியால், தனியார் நிறுவனம் உருவாக்கிய ராக்கெட்டை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறனை பெற்ற உலகின் மூன்றாவது நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. மேலும், சுற்றுப்பாதையில் ராக்கெட்டை வெற்றிகரமாக நிலைநிறுத்திய முதல் இந்திய தனியார் நிறுவனமாகவும் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் சாதனை படைத்துள்ளது.இந்த வெற்றியைத் தொடர்ந்து, ராக்கெட் உற்பத்தி மற்றும் ஏவுதல் திறனை விரிவுபடுத்தும் பணிகளில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இதுகுறித்து பவன் குமார் சந்தானா கூறுகையில், ராக்கெட் ஏவுதலுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மத்திய அரசின் பல்வேறு விண்வெளித் திட்டங்கள் நிறுவனத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, இந்தியாவின் செயற்கைக்கோள் கூட்டமைப்பு திட்டங்கள் உள்நாட்டு ராக்கெட் ஏவுதல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்றார்.மேலும், முதல் ஏவுதலில் கிடைத்த அனைத்து தொழில்நுட்பத் தரவுகளையும் ஆய்வு செய்து, அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அடுத்தடுத்த பயணங்களில் கூடுதல் மேம்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2027ஆம் ஆண்டு முதல் மாதத்திற்கு ஒரு விக்ரம்-1 ராக்கெட்டை தயாரித்து ஏவும் திறனை அடைவதே நிறுவனத்தின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் அவர் விளக்கினார்.முதல் ஏவுதலின் போது ராக்கெட் பாதுகாப்பாக ஏவுதளத்தை விட்டு புறப்படுவதே ஆரம்ப நோக்கமாக இருந்ததாகவும், ஆனால் அதையும் தாண்டி ராக்கெட் வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்து செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியதால், இந்தப் பயணத்தை முழுமையான வெற்றியாகவே கருதுவதாகவும் பவன் குமார் சந்தானா தெரிவித்தார்.விக்ரம்-1 திட்டத்தின் வெற்றி, இந்திய தனியார் விண்வெளி நிறுவனங்களின் தொழில்நுட்ப திறனை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளதாகவும், பல்வேறு சவால்களை கடந்து சுற்றுப்பாதையை அடையும் திறன் இந்திய நிறுவனங்களுக்கும் இருப்பதை இந்த சாதனை நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.