பைக்கில் மருத்துவமனைக்குச் சென்றபோது குழந்தை பெற்றெடுத்த பெண்!
வியட்நாமில் மருத்துவமனைக்கு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண், மருத்துவமனை வாசலை அடைவதற்குள் பைக்கிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.வியட்நாமின் தாய் குவாங் மாகாணம், புலுவாங் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. 25 வயதான நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து அவரது கணவர் உடனடியாக மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் புறப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையை அடையும் நேரத்தில் பிரசவ வலி தீவிரமடைந்ததால், மருத்துவமனை வாசலிலேயே மோட்டார் சைக்கிளின் பின்புற இருக்கையில் அந்தப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.இதனைப் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து தாயையும், பிறந்த குழந்தையையும் மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.
இருவரும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த பலரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.அதேபோல், அந்தத் தாயின் தைரியத்தை பலர் பாராட்டியுள்ளதுடன், மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அளித்த முதலுதவி தாயும் குழந்தையும் பாதுகாப்பாக இருக்க முக்கிய காரணமாக அமைந்ததாகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.