அமெரிக்கா: விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்; 2 வீரர்கள் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.டெக்சாஸ் மாநிலம் சலாடோ அருகே அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் ஹெலிகாப்டரான அபாச்சி ரகத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அதில் 2 ராணுவ வீரர்கள் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் வயல்வெளியில் விழுந்து தீப்பற்றி வெடித்துச் சிதறியது.விபத்தைத் தொடர்ந்து வயல்வெளியில் இருந்த புற்கள் பெருமளவில் தீப்பிடித்தன. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ சுமார் 100 ஏக்கர் பரப்பளவுக்கு பரவி சேதத்தை ஏற்படுத்தியது.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.விபத்து தொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 வீரர்கள் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதுவரை அவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாள விவரங்கள் வெளியிடப்படாது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.