நள்ளிரவில் வெளியான மோடி வீடியோ: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஜூன் 20 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்த சூழலில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அதுகுறித்த முக்கிய முடிவு இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.இதற்கு பதிலளித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நள்ளிரவில் வீடியோ வெளியிடக் கூடாது என்றும், மாணவர்கள் முன்வைக்கும் முக்கிய கோரிக்கை கல்வி அமைச்சரை பதவிநீக்கம் செய்வதே என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், மாணவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.