தெலுங்கானாவில் ரீல்ஸ் எடுக்கும்போது கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் பலி
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் ரீல்ஸ் பதிவு செய்துகொண்டிருந்தபோது கால்வாயில் தவறி விழுந்த விபத்தில், ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
நிஜாமாபாத் ஆட்டோ நகரைச் சேர்ந்த ஷேக் கலீம் (24), நஜாவத் (24), மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிமாயத் நகரைச் சேர்ந்த பர்ஹான் (17), போகாரோ பகுதியைச் சேர்ந்த அகீம் (17) ஆகிய நான்கு பேரும் முப்பால் பகுதியில் உள்ள ஸ்ரீராம் சாகர் அணையின் லட்சுமி பாசன கால்வாயில் குளிக்கச் சென்றிருந்தனர்.அவர்கள் கால்வாயில் குளித்துக்கொண்டே செல்போனில் ரீல்ஸ் பதிவு செய்து வந்தபோது, திடீரென கால் வழுக்கி ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் நால்வரும் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் மூவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், மாயமான அகீமை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிஜாமாபாத் மாவட்டத்தில் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது ஏற்பட்ட இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.