திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ.3.78 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 84,488 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 37,061 பேர் தலைமுடி காணிக்கையை செலுத்தியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.அன்றைய தினத்தில் உண்டியல் மூலம் கிடைத்த காணிக்கை ரூ.3 கோடியே 78 லட்சமாக பதிவாகியுள்ளது.பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்ததால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மென்ட்களும் நிரம்பின. இதன் காரணமாக சிலாத்தோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட ‘டைம் ஸ்லாட்’ டோக்கன் இல்லாமல் வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 20 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.மேலும், நேற்று முன்தினம் கோவிலில் 4.28 லட்சம் லட்டுகள் விற்பனையானதாகவும், 2.74 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அதேநாளில் 3,789 பேருக்கு மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டன.