சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனார் குருபூஜை விழா கோலாகலம்
சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் தியாகராஜசுவாமி–வடிவுடையம்மன் திருக்கோவிலில், ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சைவ சமயத்தின் புகழ்பெற்ற நாயன்மார்களான சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் சேரமான் பெருமாள் நாயனாரின் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே கோவிலில் விசேஷ பூஜைகள் தொடங்கின. சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் சேரமான் பெருமாள் நாயனாருக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்கள், பட்டாடைகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளை தரிசித்து வழிபட்டனர்.மாலையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வாக, சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளை யானை வாகனத்தில் எழுந்தருளி, கோவிலின் நான்கு மாடவீதிகளிலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஊர்வலப் பாதை முழுவதும் பக்தர்கள் தேங்காய் உடைத்து, மலர்கள் சமர்ப்பித்து, தீபம் ஏற்றி பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.சுந்தரமூர்த்தி சுவாமியும் சேரமான் பெருமாள் நாயனாரும் திருக்கயிலாயம் சென்றதாகக் கூறப்படும் தெய்வீக வரலாற்றை நினைவுகூரும் வகையிலேயே இந்த குருபூஜை விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.