"நான் அப்படி பேசவே இல்லை" - இடஒதுக்கீடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷில்பா ஷெட்டி
இந்தியாவின் இடஒதுக்கீட்டு முறையைப் பற்றி நடிகை ஷில்பா ஷெட்டி கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஷில்பா ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டதாகக் கூறி, போலியாக உருவாக்கப்பட்ட ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், "இடஒதுக்கீட்டின் மூலம் திறமையை உருவாக்க முடியாது" என்றும், "நோயாளிகள் தங்களது சொந்த சாதியைச் சேர்ந்த மருத்துவர்களிடமே சிகிச்சை பெற வேண்டும்" என்றும் கூறப்பட்டதாகக் காணப்பட்டது. இந்த பதிவு வைரலாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்துக்கு தற்போது விளக்கம் அளித்துள்ள ஷில்பா ஷெட்டி, தனது பெயரில் பரவி வரும் அந்த பதிவு முற்றிலும் போலியானது என்றும், அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் தன்னுடையவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இடஒதுக்கீடு தொடர்பாக என் பெயருடன் இணைத்து போலியான கருத்துகள் பரப்பப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவை அனைத்தும் முழுமையாக புனையப்பட்டவை. தீங்கிழைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த போலி தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.