சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்; மத்திய அரசு வலியுறுத்தல்
மேற்கு ஆசிய கடல் பகுதியில் வர்த்தக சரக்கு கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து இந்திய மத்திய அரசு கடும் கவலை தெரிவித்துள்ளது. சர்வதேச கடல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது. தாக்குதல்களுக்கு உள்ளான கப்பல்களில் இந்திய மாலுமிகளும் பணியாற்றியிருந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா தீவிர அக்கறை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் வழி வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தவொரு வன்முறைச் செயலையும் ஏற்க முடியாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.மேலும், அனைத்து தரப்பினரும் பதற்றத்தைத் தணித்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. சர்வதேச கடல் போக்குவரத்து தடையின்றி தொடர்வதும், மாலுமிகளின் உயிர் பாதுகாப்பும் உலக நாடுகளின் பொறுப்பாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.