சென்னை - ஹாங்காங் விமான சேவை புயலால் ரத்து; சர்வதேச பயணியர் அவதி
ஹாங்காங்கை அச்சுறுத்தி வரும் 'தைபூண் நவுல்' புயல் காரணமாக, சென்னை - ஹாங்காங் இடையே இரு திசைகளிலும் இயக்கப்பட இருந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால், சர்வதேச பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
சீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதியை ஒட்டியுள்ள ஹாங்காங்கில் இருந்து 217 பயணிகளுடன் புறப்பட்ட கேத்தே பசிபிக் விமானம், நேற்று இரவு 11.50 மணியளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அதே விமானம், நள்ளிரவு 12.50 மணிக்கு 220 பயணிகளுடன் மீண்டும் ஹாங்காங்குக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், ஹாங்காங்கை 'தைபூண் நவுல்' புயல் தாக்கும் அபாயம் இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனால், சென்னையில் இருந்து ஹாங்காங் செல்ல காத்திருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.இதனுடன், ஹாங்காங்கில் இருந்து இன்று சென்னை வர இருந்த கேத்தே பசிபிக் விமானமும் புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது. சென்னை - ஹாங்காங் விமானம் மூலம் லண்டன், டோக்கியோ, மெல்போர்ன், சீயோல் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நகரங்களுக்கு தொடர்ச்சியாக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணிகளும் இந்த ரத்து காரணமாக சிரமத்தை சந்தித்தனர்.இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ஹாங்காங்கில் புயலின் தாக்கம் குறைந்த பிறகு, நாளை அதிகாலை அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்குக்கு புறப்படும் என தெரிவித்தனர்.