கிரீஸில் தீயணைப்பு பணியில் ஈடுபட்ட இரு ஹெலிகாப்டர்கள் மோதல்; 2 பேர் உயிரிழப்பு
ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
ஐரோப்பிய நாடான கிரீஸ், தற்போது காட்டுத்தீ பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்துவது தீயணைப்புத்துறையினருக்கு சவாலாக மாறியுள்ளது. இதையடுத்து, ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த சூழலில், தலைநகர் ஏதென்ஸுக்கு மேற்கே அமைந்துள்ள கடலோரப் பகுதியான சதாவில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.இந்த விபத்தில் ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து சேதமடைந்தது.
அதில் பயணம் செய்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விமானி மற்றும் கிரீஸ் தீயணைப்புத்துறை அதிகாரி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.மற்றொரு ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், அதில் இருந்த விமானி உள்ளிட்ட இருவர் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.இந்த விபத்து குறித்து கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.