கர்நாடகாவில் ஜிப்லைன் விபத்து: 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர் தீவிர சிகிச்சையில்
கர்நாடகாவின் தண்டேலியில் ஜிப்லைன் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த 24 வயது இளைஞர் ஒருவர், பாதுகாப்பு பூட்டு செயலிழந்ததால் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து கடுமையாக காயமடைந்தார்.விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த குபேரா சுரபுரா, தண்டேலியில் அமைந்துள்ள 'ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட்'க்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற ஜிப்லைன் சாகசத்தில் பங்கேற்றபோது, கயிற்றில் பயணித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரது பாதுகாப்பு இணைப்பு திடீரென அறுந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக சமநிலையை இழந்த அவர், சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்தார். இந்த விபத்தில் அவரது கை, கால்களில் பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டதுடன், நரம்பு மண்டலத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதலில் தண்டேலியில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட அவரை, பின்னர் மிராஜில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி அனுமதித்துள்ளனர்.இந்த விபத்துக்கு ரிசார்ட்டின் போதிய பராமரிப்பு இல்லாமையும் அலட்சியமும் காரணம் என்று குபேரா சுரபுராவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக முதலில் தெரிவித்த ரிசார்ட் நிர்வாகம் தற்போது அந்த உறுதியை நிறைவேற்றவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்த தருணத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.