என் தந்தையின் உயிரை காப்பாற்றுங்கள்: சர்வதேச நாடுகளிடம் இம்ரான் கானின் மகன் காசிம் கான் கோரிக்கை
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (73), 2018 முதல் 2022 வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து அவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.பிரதமர் பதவியை இழந்த பிறகு, இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் 2023 ஆகஸ்ட் 5ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையில் உள்ளார்.
இம்ரான் கானின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், அவரை குடும்பத்தினர் சந்திக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்த சூழலில், இம்ரான் கானின் மகன் காசிம் கான் சர்வதேச நாடுகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது தந்தை சுமார் 1,100 நாட்களாக சிறையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலையும் கண்பார்வையும் மோசமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், இம்ரான் கானுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம் என்றாலும், அதை பாகிஸ்தான் அரசு வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டிய காசிம் கான், அவருக்கு தேவையான மருத்துவ உதவியை உறுதி செய்யும் வகையில் பாகிஸ்தான் மீது சர்வதேச நாடுகள் அழுத்தம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.