அமெரிக்கா - ஈரான் பதற்றம் தீவிரம்: கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டிருந்த இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த மோதலின் தாக்கமாக, உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கப்பல்களின் இயக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சவுதி அரேபியாவில் இருந்து செங்கடல் வழியாக பாப் அல்-மண்டேப் ஜலசந்தி மூலம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனினும், அந்தப் பகுதியை ஒட்டியுள்ள ஏமனின் பெரும்பாலான பகுதிகள் ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி அமைப்பினர், பாப் அல்-மண்டேப் ஜலசந்தியையும் முழுமையாக மூடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு அந்த கடல் வழித்தடமும் பாதிக்கப்பட்டால், உலகளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் விளைவாக சர்வதேச பொருளாதாரத்திலும் பெரிய தாக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இந்தியாவும் இதன் பாதிப்பிலிருந்து தப்பாது என்றும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே உயரத் தொடங்கியுள்ளது.