அப்துல்கலாமின் அர்ப்பணிப்பு நாட்டுப்பணிக்கு என்றும் உத்வேகம் அளிக்கிறது: ராஜ்நாத் சிங்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நாட்டிற்காக காட்டிய தன்னலமற்ற அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமாக இருந்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.அப்துல்கலாமின் நினைவு நாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "மக்களின் ஜனாதிபதி" என்றும் "இந்தியாவின் ஏவுகணை மனிதர்" என்றும் போற்றப்படும் அப்துல்கலாமுக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவின் உள்நாட்டு ஏவுகணை மேம்பாடு மற்றும் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு மிக முக்கியமானது என்றும், தொலைநோக்குப் பார்வையுடைய சிறந்த விஞ்ஞானியாக அவர் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.மேலும், அப்துல்கலாமின் எளிமையான வாழ்க்கை முறை, நேர்மை மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் வெளிப்படுத்திய உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவை தலைமுறைகளைத் தாண்டியும் இளைஞர்களை பெரிய இலக்குகளை நோக்கி கனவு காணவும், அச்சமின்றி புதுமைகளை உருவாக்கவும், தன்னலமற்ற மனப்பான்மையுடன் நாட்டுக்குச் சேவை செய்யவும் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக ராஜ்நாத் சிங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.