முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் யானைகள் முகாமில், வார இறுதி விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஆசியாவின் பழமையான வளர்ப்பு யானைகள் முகாம்களில் ஒன்றான இங்கு, உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கத்தைவிட அதிகளவில் பயணிகள் வருகை தந்தனர்.
அங்கு நிலவிய குளிர்ச்சியான வானிலையையும், அவ்வப்போது பெய்த சாரல் மழையையும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக ரசித்தனர். முகாமில் வளர்க்கப்படும் யானைகள் மாயாற்றில் குளிக்க அழைத்துச் செல்லப்பட்டன.
ஆற்றில் தண்ணீரை உறிஞ்சி தங்கள்மீது பீய்ச்சியடித்தும், ஒன்றுடன் ஒன்று விளையாடியும் யானைகள் செய்த குறும்புகள் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.மேலும், யானைகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஊட்டச்சத்து உணவு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதற்காக முகாமில் உள்ள தனி சமையல் கூடத்தில் ராகி, கொள்ளு உள்ளிட்ட தானியங்களைக் கொண்டு உணவு உருண்டைகள் தயாரிக்கப்பட்டன.
பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் ஒவ்வொரு யானையின் பெயரையும் அழைத்து உணவு வழங்கினர். யானைகள் வரிசையாக நின்று உணவு உண்ட காட்சியை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து மகிழ்ந்தனர்.