பெண் சிசு என கண்டறிந்து கருக்கலைப்பு செய்த நர்ஸ்: குண்டர் சட்டத்தில் கைது
தர்மபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து, பெண் சிசு என தெரிந்ததும் கருக்கலைப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நர்ஸ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் மீண்டும் கர்ப்பமானார். கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை சட்டவிரோதமாக ஸ்கேன் மூலம் கண்டறிந்ததில், பெண் சிசு என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது.கருக்கலைப்புக்குப் பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பாரதி மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கருக்கலைப்பு செய்ததாக கூறப்படும் தர்மபுரியைச் சேர்ந்த நர்ஸ் கற்பகம் (43), இடைத்தரகராக செயல்பட்ட பச்சியம்மாள் ஆகியோரை அதியமான்கோட்டை போலீசார் கடந்த 30-ந்தேதி கைது செய்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், கற்பகம் ஏற்கனவே கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோதமாக கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவிப்பது மற்றும் கருக்கலைப்பு செய்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் உத்தரவின்பேரில் கற்பகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். அதன்படி, கற்பகத்தை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்தனர்.