பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து தமிழக அரசை விமர்சித்துள்ளார்.அவரது பதிவில், அடையாறு பகுதியில் தவெக நிர்வாகி ஒருவர் துரத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், சென்னையை அடுத்த நொளம்பூரில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இலவசமாக பீடி வழங்க மறுத்த அந்த தொழிலாளியை, மதுபோதையில் இருந்த கும்பல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கொடூரமாக தாக்கியதாக வெளியாகியுள்ள காணொளி வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.சென்னையில் ஒரே நாளில் நடைபெற்றதாக குறிப்பிடப்படும் இந்த இரண்டு கொலை சம்பவங்களும், தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சியின் நிலையை வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.தமிழகத்தில் சுமார் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வசித்து வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், வேலை தேடி தமிழகத்திற்கு வந்தவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது நாட்டின் அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது மாநிலத்தின் உள்கட்டமைப்பு குறித்தும் கேள்வியை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார்.ஆட்சிக்கு வந்தது முதல் தன்னை மக்களிடம் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதிலேயே முதல்வர் விஜய் கவனம் செலுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், பொதுமக்களின் பாதுகாப்பை இனியும் அரசு புறக்கணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.மேலும், காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான சட்டப்பேரவை பதிலுரையை முதல்வர் இன்று வழங்க உள்ள நிலையில், தவெக ஆட்சிக்கு வந்தது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் குற்றங்கள், காவல் மரணங்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கொடூர குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சீர்குலைந்துள்ளதாக அவர் கூறும் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்த தவெக அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்தும் சட்டப்பேரவையில் முதல்வர் விளக்க வேண்டும் என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.