பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டால் தொழில் வளர்ச்சி பாதிக்கும்: தங்கம் தென்னரசு
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அவர் கூறியதாவது:
“பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சட்டசபை விதி 55-ன் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்திருந்தோம். அந்த தீர்மானம் இன்று எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதல்-அமைச்சர் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டதால், பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது. சபாநாயகரும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை.தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அவசியம்.
அந்த வகையில் பரந்தூர் விமான நிலைய திட்டம் முக்கியமானது. விமான நிலையம் அமைவது தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும்.சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால், அப்பகுதியின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் தேவையானதாக உள்ளது.பரந்தூர் விமான நிலையத்தை அடிப்படையாகக் கொண்டே ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் மின்னணு நிறுவனங்கள் வந்ததாக கூறப்படுகிறது. எனவே, இந்த திட்டம் கைவிடப்பட்டால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். ஆனால், அதற்கான விவாதம் நடத்த மறுக்கப்பட்டுள்ளது. அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு இந்த விவகாரத்தில் செயல்படுவது அவசியம்.”