நெல்லையில் முடங்கிய டாஸ்மாக் கடைகள்; மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.வழக்கம்போல் காலை திறக்க வேண்டிய மதுக்கடைகள் திடீரென மூடப்பட்டதால், மதுபானம் வாங்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். கடைகள் முன்பு நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள், பின்னர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இதன் காரணமாக நெல்லை மாவட்டம் முழுவதும் மது விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நெல்லை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் திரண்டனர்.அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்ட ஊழியர்கள், பின்னர் உள்ளே சென்று தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து முழக்கங்களையும் எழுப்பினர்.ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் மாவட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதுடன், ஊழியர்கள் முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் இன்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.