நடுவானில் விமானத்திற்கு 300 அடி தொலைவில் நெருங்கிய பறக்கும் தட்டு; விமானி அதிர்ச்சி
இங்கிலாந்தில் தரையிறங்க தயாராக இருந்த பயணிகள் விமானத்திற்கு மிக அருகில் மர்மமான வட்ட வடிவ பொருள் ஒன்று பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக ஏர்பஸ் ஏ319 பயணிகள் விமானம் சசெக்ஸ் கவுன்டியின் ஹேங்கிராஸ் அருகே, கேட்விக் விமான நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 7 மைல் தொலைவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.விமானம் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், மர்ம பொருள் ஒன்று திடீரென மேல்நோக்கி எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. அது விமானத்தின் வலது இறக்கை அருகே, சுமார் 100 முதல் 300 அடி இடைவெளிக்குள் மிகவும் நெருக்கமாக வந்ததால் விமானி அதிர்ச்சி அடைந்தார்.அந்த பொருளை விமானி முன்கூட்டியே கவனித்ததால், விமானத்தின் பாதை மாற்றப்பட்டு பாதுகாப்பான திசையில் செலுத்தப்பட்டது. இதனால் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை. பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும், சம்பவம் குறித்து விமானி உயரதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார்.அதிகாரிகளிடம் அளித்த விளக்கத்தில், அந்த மர்ம பொருள் வட்ட வடிவ தட்டு, பறக்கும் தட்டு அல்லது டிரோனாக இருக்கக்கூடும் என்று விமானி தெரிவித்தார்.
மேலும், அது விமானத்திற்கு எதிர்திசையில், அதே உயரத்தில் பறந்து வந்து, வலது இறக்கை பகுதியை ஒட்டியவாறு கடந்ததாகவும் கூறினார்.அந்த பொருளின் வெளிப்புற விளிம்புகளில் கருப்பு நிற அடையாளங்கள் இருந்ததாகவும், அது நவீன வகை டிரோனாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் விமானி தெரிவித்தார். இருப்பினும், அதன் உண்மையான அடையாளம் அல்லது அது எந்தப் பகுதியில் இருந்து வந்தது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பகுதியில் வேறு விமானங்கள் எதுவும் இல்லாததால், அந்த மர்ம பொருளை வேறு யாரும் காணவில்லை. இதையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும், இங்கிலாந்தின் தனியார் விமானப் பாதுகாப்பு ஆய்வு அமைப்பான ஏர்பிராக்ஸ் இந்த சம்பவத்தை தீவிரமாக கண்காணித்து விரிவான விசாரணை நடத்தி வருகிறது.