தென்காசி: மலையடிப்பட்டி அகழாய்வில் 5-ம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின்போது பழங்கால பானைகள், தாழிகள், இரும்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் படிக்கட்டுகளுடன் அமைந்திருந்த சங்க கால செங்கல் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த கிணற்றுக்குள் இருந்து கி.பி. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு கிடைத்துள்ளது.இந்த நடுகல்லில், பழந்தமிழ் தமிழி எழுத்து வட்டெழுத்தாக மாறிய காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.
சுமார் 1 மீட்டர் நீளமும், 0.30 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நடுகல்லில் ‘கருக்கண்’, ‘சுளகன்’, ‘நன்னங்’, ‘கொடியன்’ ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அகழாய்வு இயக்குனர் எத்திஸ் குமார் மற்றும் அகழாய்வு துணை பொறுப்பாளர் காளீஸ்வரன் கூறுகையில், நடுகல்லில் உள்ள எழுத்துகளை ஆராயும்போது, இது கருக்கண் சுளகனின் மகன் நன்னங்கொடியனுக்காக அமைக்கப்பட்டதாக பொருள் கொள்ள முடிகிறது என தெரிவித்தனர். இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.