சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும்? - மாணிக்கம் தாகூர் விளக்கம்
சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் கணக்கெடுப்பை அவசரமாக முன்கூட்டியே நடத்த மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பு முறையாகவும் துல்லியமாகவும் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர், நாட்டில் பாதிக்கும் அதிகமான மக்கள் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தும், அவர்களின் சரியான எண்ணிக்கை பல ஆண்டுகளாக தெரியாத நிலை உள்ளது. இதனால் அதிகாரம் மற்றும் உரிமைகளில் பெரும்பான்மையான மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அவர்களின் உண்மையான எண்ணிக்கை அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டால்தான் சமூகநீதியை முழுமையாக உறுதி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அரசியலமைப்புச் சட்டத்தின் 340-வது பிரிவு பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய உரிமைகளை வழங்குவதற்கான வழிவகையை ஏற்படுத்துகிறது. ஆனால், தேவையான புள்ளிவிவரங்கள் தெளிவாக இல்லாத நிலையில், அந்த சட்டப்பிரிவை அரசு முறையாக செயல்படுத்த முடியாது என்றும், துல்லியமான சாதிவாரி கணக்கெடுப்பு இதற்கு அவசியம் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.மேலும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் யூகத்தின் அடிப்படையில் இல்லாமல், உண்மையில் தேவைப்படும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு சென்றடைய சரியான மக்கள் தொகைத் தரவுகள் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசு முன்வைத்துள்ள கேள்வித்தாள் முறையிலும் குளறுபடிகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சாதிப் பெயரை வெவ்வேறு எழுத்து அல்லது உச்சரிப்பு முறைகளில் பதிவு செய்தால், அவை தனித்தனி பிரிவுகளாக கணக்கிடப்படும் நிலை ஏற்படலாம்.