சில உறுப்பினர்கள் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:சட்டப்பேரவை விதிகளின்படி, விதி எண் 55, 56 உள்ளிட்டவற்றின் கீழ் வழங்கப்படும் அறிவிப்புகள், பேரவைச் செயலாளர் அல்லது சபாநாயகரின் அனுமதிக்குப் பிறகே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.ஆனால், சில உறுப்பினர்கள் தாங்கள் அளிக்கும் அறிவிப்புகளை உடனடியாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களுக்கு வழங்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.சபாநாயகரின் அனுமதி கிடைக்கும் முன்பே, உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் அந்த அறிவிப்புகளை வெளியிடுவது சட்டப்பேரவை விதிகளுக்கு எதிரானது.
இதுதொடர்பாக பேரவை விதி எண் 36(5)-ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார். சபாநாயகர் அனுமதித்து உறுப்பினர்களுக்கு அனுப்பும் வரை, அந்த அறிவிப்புகளை உறுப்பினர்களோ அல்லது வேறு யாருமோ வெளியிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.எனவே, இன்று முதல் தொலைக்காட்சிகள் மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும் இதை தெரிவித்துக் கொள்வதாக கூறிய சபாநாயகர், சட்டப்பேரவை விதிகளுக்கு மாறாக உறுப்பினர்கள் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டால் அவற்றை பிரசுரிக்கவோ, வெளியிடவோ கூடாது என கேட்டுக்கொண்டார்.அனைத்து உறுப்பினர்களும் சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுறுத்தினார்.