சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் அல்ல; நிர்வாக அலுவலகமே அவசியம்: கிருஷ்ணசாமி
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக தேவைப்படுவது கார் வசதி அல்ல; தொகுதி மக்களின் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க உதவும் நிர்வாக அலுவலகம்தான் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சில சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் கார் வழங்கும் திட்டம் 110 விதியின் கீழ் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பின்னர், சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திட்டங்களை முறையாக ஆய்வு செய்யாமல் அறிவிப்பதால் இதுபோன்ற விமர்சனங்கள் ஏற்படுகின்றன.தொகுதி முழுவதும் சென்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு அறிய, தற்போதைய சூழலில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் வாகனம் இருப்பது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில், அந்த வசதியே இல்லாத சட்டமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.தமிழக அரசு நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், கார் வழங்கும் திட்டம் ஆடம்பரமானது, தேவையற்ற செலவு என்ற விமர்சனங்கள் எழுகின்றன.
ஆனால், ஒரு தொகுதியில் 200 முதல் 300 கிராமங்கள் வரை இருக்கும் நிலையில், அங்குள்ள மக்களின் தேவைகளை உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தனி நிர்வாக அலுவலகம் தேவை என்பதை ஏன் யாரும் வலியுறுத்தவில்லை என்பது புரியவில்லை.சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராகும்போது, அவரது நிர்வாக அதிகாரம் மாநில அளவில் விரிவடைகிறது. ஆனால், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு அரசு அலுவலகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது.எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குள் சுயமாகவும் உரிய மதிப்புடனும் மக்கள் பணியாற்றுவதற்கு, குறைந்தபட்சம் ஒரு தட்டச்சர், உதவி பி.டி.ஓ., துணை வட்டாட்சியர் மற்றும் ஒரு பொறியாளர் ஆகியோர் இடம்பெறும் தனி நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இத்தகைய அலுவலகம்தான் தேவையே தவிர, கார் அல்ல.இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.