ஈரோடு ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்
ஈரோடு ரெயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்லும் இந்த நிலையத்தில் தற்போது 4 நடைமேடைகள் உள்ளன.இதுவரை பயணிகள் சுரங்கப் பாதை வழியாக சென்று, நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்தி நடைமேடைகளை அடைந்து வந்தனர். இதனால் ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் இருந்து அனைத்து நடைமேடைகளுக்கும் நேரடியாக செல்லும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில், மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஈரோடு ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.38 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து நடைமேம்பாலம் அமைத்தல், நிலையத்தை விரிவுபடுத்துதல், நடைமேடைகளை சீரமைத்தல், வாகன நிறுத்துமிடத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டன.இதில் வாகன நிறுத்துமிடம் புதுப்பிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.
மேலும், புதிய நுழைவாயில் வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதில் பயணிகள் எளிதாக செல்ல படிக்கட்டுகள், லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கான எந்திரங்கள் ரெயில் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.இதனிடையே, ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. பணிகள் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டாலும், ரெயில் நிலையத்துக்குள் செல்லும் பயணிகள் சற்று அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.பழைய கட்டிடம் அகற்றப்பட்ட பின்னர், அப்பகுதியில் காத்திருப்போர் அறை, டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் உள்ளிட்ட புதிய வசதிகள் அமைக்கப்பட உள்ளன. ரெயில் நிலையத்தின் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் 8 மாதங்களில் நிறைவடையும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.