ஆவின் பால் கொள்முதல்: சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
ஆவின் நிறுவனத்துக்கான பால் கொள்முதல் விலை தொடர்பாக தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.பால் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பேசியபோது, கால்நடை தீவனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், தற்போது வழங்கப்படும் கொள்முதல் விலை உற்பத்தியாளர்களுக்கு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் ஒரு லிட்டர் பால் ரூ.45-க்கு கொள்முதல் செய்யப்படுவதை சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கால்நடைகளுக்கான தீவனச் செலவு மற்றும் பராமரிப்பு செலவு அதிகரித்துள்ள நிலையில், அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலை போதுமானதாக இல்லை என்றார். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பால் முகவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.50-ம், எருமைப் பாலுக்கு ரூ.60-ம் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என தெரிவித்தார்.
2021-ம் ஆண்டு தி.மு.க. அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்ததால், ஆவின் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.270 கோடி கூடுதல் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
பால் விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யவும், பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால், ஆவின் நிறுவனம் கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதாகவும், முதல்-அமைச்சர் விஜய் ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாதங்களிலேயே கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்துவது குறித்து முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி பரிசீலிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்தார்.