விமான நிலைய திட்டம் ரத்து: பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பரந்தூர் மக்கள்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடுவதாக அறிவித்ததற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சட்டமன்றத்தில் இன்று முதல் அமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கும் திட்டம், மாநகர மற்றும் நகராட்சிப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் ஆகியவற்றுடன், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசு அதிகாரப்பூர்வமாக கைவிடுவதாகவும் அவர் அறிவித்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல் அமைச்சர் விஜய் தெரிவித்தார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், ஏற்கெனவே அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் கைவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று இடங்களை தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. துறைசார் வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த இடங்களில் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு, புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் முடிவு செய்யப்படும் எனவும் கூறப்பட்டது.இதனிடையே சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 2 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட ‘டெர்மினல் 5’ என்ற ஐந்தாவது பயணிகள் முனையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ‘டெர்மினல் 3’ கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறனை பெறும். ‘டெர்மினல் 5’ பணிகளும் முடிந்து பயன்பாட்டுக்கு வந்த பின்னர், ஆண்டுக்கு மொத்தம் 5.5 கோடி பயணிகளை கையாளும் வகையில் சென்னை விமான நிலையத்தின் திறன் அதிகரிக்கும்.இதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுவதுடன், புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை பயணிகளின் போக்குவரத்து தேவையையும் சமாளிக்க முடியும் என முதல் அமைச்சர் விஜய் தெரிவித்தார்.அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பரந்தூர் பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.