விருத்தாசலம்: வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - 2 சிறுவர்களிடம் விசாரணை
சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்தே பாரத் ரெயில் நேற்று புறப்பட்டுச் சென்றது. இந்த ரெயில் காலை 8.30 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூவனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் திடீரென கற்களை வீசி தாக்கினர்.இந்த கல்வீச்சில் ரெயிலின் 2 ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் மற்றும் விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணையை தொடங்கினர்.இதையடுத்து சம்பவம் நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரெயிலில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், ரெயில் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்தது 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து அந்த சிறுவர்களை பிடித்த ரெயில்வே போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.