முதல்-அமைச்சர் விஜய் மக்களின் வரிப்பணத்தில் லண்டனுக்கு சொகுசுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு, கொலைகள், பாலியல் குற்றச்சாட்டுகள், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் நிலவுவதாகவும், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வரும் நிலையில், முதல்-அமைச்சர் விஜய் லண்டனில் கார் பந்தயத்தை நண்பர்களுடன் கண்டுகளித்து வருவதாகவும் அந்தப் பதிவு விமர்சித்துள்ளது. மின்வெட்டு தொடர்பாக மாநில மின்சாரத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகளையும், மின்வெட்டு இல்லை என துணை சபாநாயகர் கூறியதையும் திமுக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது.
Advertisement
பட்டினப்பாக்கம் மீனவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கும் செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நடத்தும் போராட்டங்களுக்கும் தவெக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் அந்தப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருளான ஆவின் பாலுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பண்டிகைக் காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் திமுக ஐடி விங் தனது பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற சூழ்நிலையில் ஆட்சியின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில், "இதுதான் மாற்றமா?" எனவும் திமுக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது. இவ்வாறு அந்த எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.