தலைமைச்செயலாளர் மாற்றமா? அமைச்சர் ஷாஜகான் பதில்
தமிழக தலைமைச் செயலாளர் மாற்றம் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்து உரிய முடிவை எடுப்பார் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது:
தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் உள்ளன. அவற்றுக்குச் சொந்தமான சில சொத்துகள் வாடகை அல்லது குத்தகைக்கு விடப்படும்போது, அந்த சொத்துகளை மீண்டும் கைப்பற்றி வக்பு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற சொத்துகளை மீட்டு, சம்பந்தப்பட்ட வக்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.வருகிற 27-ந்தேதி சட்டசபையில் சிறுபான்மையினர் நலத்துறைக்கான மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது. அப்போது பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் சமுதாய முன்னேற்றம் சார்ந்த திட்டங்கள் இடம்பெறும்.த.வெ.க. அரசின் 100 நாள் ஆட்சி குறித்து கேட்கிறீர்கள். லஞ்சம் மற்றும் ஊழலுக்கு இடமில்லாத வகையில் இந்த ஆட்சி செயல்பட்டு வருகிறது. தேர்தல் காலத்தில் தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டார். தற்போது அவருக்கு 6 மாத கால பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.அரசின் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவே நாங்கள் பார்க்கிறோம். அதே நேரத்தில், தலைமைச் செயலாளர் பா.ஜனதா சார்பில் நியமிக்கப்பட்டவர் என்ற கருத்தை முன்வைத்து சில அரசியல் கட்சிகள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. தலைமைச் செயலாளர் மாற்றம் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்து முடிவு எடுப்பார்.