சீனாவின் மஞ்சள் நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: ஆர்வத்துடன் ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
சீனாவின் முக்கிய நதிகளில் ஒன்றான மஞ்சள் நதி (Yellow River), அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும். சீன நாகரிகம் வளர்ந்ததற்கான முக்கிய ஆதாரமாகக் கருதப்படுவதால், இது ‘சீன நாகரிகத்தின் தொட்டில்’ என்றும், ‘தாய் நதி’ என்றும் அழைக்கப்படுகிறது.
வண்டல் மண் அதிகளவில் கலந்திருப்பதால் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும் இந்த நதி, வரலாற்றில் பலமுறை கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே இது ‘சீனாவின் துயரம்’ என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிறது.தற்போது மஞ்சள் நதியில் அமைந்துள்ள கூகோ நீர்வீழ்ச்சியில் (Hukou Waterfall) கோடைகால வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறுகலான நீர்ப்பாதையில் சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து மஞ்சள் நிற நீர் தங்கத்தைப் போல காட்சியளித்தபடி வேகமாக கீழ்நோக்கி பாய்கிறது.ஆர்ப்பரித்தபடி சீறிப்பாயும் நீரின் பிரம்மாண்ட காட்சியை காணவும் ரசிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.