அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு
சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த கலாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. நேற்று பெய்த கனமழையால் அந்த பள்ளத்தில் தண்ணீர் முழுமையாக தேங்கியிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற கலாவதி, பள்ளம் இருப்பது தெரியாமல் தண்ணீர் நிரம்பிய பகுதியில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.இதனை அங்கிருந்தவர்கள் கவனித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பள்ளத்தின் அடிப்பகுதியில் மின்சார வயர்கள் சென்றிருந்ததால், முதலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் கலாவதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.பள்ளத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே, தனது தாய் அரசின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கலாவதியின் மகள் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார். பள்ளத்தைச் சுற்றிலும் எந்தவிதமான தடுப்புகளும் அமைக்கப்படவில்லை என்றும், மின்வாரிய பணிகள் தொடர்பாக எச்சரிக்கை அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பள்ளத்தைச் சுற்றி உரிய தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.