விடுமுறை நாளில் குற்றாலத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
தென்காசி மாவட்டத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது இடையிடையே சாரல் மழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக, மாவட்டத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.பிரபல சுற்றுலா மையமாக விளங்கும் குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி மற்றும் புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து சீரான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.இன்று விடுமுறை தினமாக இருந்ததால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்தனர்.
குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் குளித்து மகிழ்ந்தனர்.அருவிகளில் குளித்த பிறகு, சுற்றுலா பயணிகள் அருவிக்கரைப் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை வாங்கி சுவைத்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை அதிகரித்து, வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.