80-வது சுதந்திர தினம்: சென்னை ரிப்பன் கட்டடத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய மேயர் பிரியா
80-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று சிறப்பு விழா நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், மூவர்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.இதையடுத்து, தேசிய மாணவர் படை, சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தினர், பேண்டு மற்றும் வாத்தியக்குழுவினரின் அணிவகுப்பு மரியாதையை மேயர் ஏற்றுக்கொண்டார்.விழாவின் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சஞ்சீவராயன் தெரு, புழல், கிருஷ்ணாம்பேட்டை, பூத்தப்பேடு, கோயம்பேடு மற்றும் ஜல்லடியான்பேட்டை ஆகிய பகுதிகளில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். அதேபோல், குரு வித்யாஷ்ரம் சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை கவர்ந்தன.பின்னர், மாநகராட்சிக்கு அதிக அளவில் சொத்துவரி செலுத்திய மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், உரிய காலத்தில் தொடர்ந்து சொத்துவரி செலுத்திய மூன்று சொத்து உரிமையாளர்களுக்கும் மேயர் பிரியா பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.மேலும், மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்பட்ட பகுதி கூட்டமைப்புகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 'மணிமேகலை விருதுகள்' வழங்கப்பட்டன.தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் சிறப்பான பணியை மேற்கொண்ட வடக்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட 180 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மாணவர் படை, சாரணர், சாரணியர் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.