லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது: சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பேச்சு
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினார். மக்கள் ஒன்றிணையும் சூழலில் சாதி, மதம், இனம் போன்ற வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தை லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து பாதுகாப்பதும் ஒரு வகையான விடுதலையே என்றும், அதற்காகவே தங்களின் அரசு செயல்பட்டு வருவதாகவும் விஜய் தெரிவித்தார். சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து அதைப் பாதுகாத்தபடி மாநிலம் முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.மாநிலத்தில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற்று வருவதாகக் கூறிய அவர், அரசின் கொள்கைகளுக்கு முரணான எந்த விஷயத்தையும் உறுதியாக எதிர்ப்போம் என்றார். நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தொடரும் என்றும், தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் எதுவும் கைவிடப்படவில்லை என்றும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், 100 நாள் வேலைத் திட்டம் தற்போது 125 நாட்களாக நீட்டிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.கடந்த மூன்று மாதங்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கோவில் நிலங்கள் கணக்கெடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்படும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.லஞ்சம் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்காக வாட்ஸ் அப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஊழலை முற்றிலுமாக ஒழிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொது வாழ்க்கையில் சமரசத்திற்கு இடமில்லை என்றும், மக்கள் நலனே அரசின் முதன்மை நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.மக்கள் தொடர்ந்து அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும், அப்போதுதான் மேலும் பல நலத்திட்டங்களை கொண்டு வர முடியும் என்றும் விஜய் கூறினார். தன்னைச் சேர்த்து அரசில் உள்ள அனைவரும் மக்களின் சேவகர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.அரசுக்கு எதிராக செயல்படும் அனைத்து சக்திகளையும் முறியடிப்போம் என்றும், விழாவில் விருதுகளைப் பெற உள்ள அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், நல்லதே நடைபெறும் என்றும், வெற்றி உறுதி என்றும் தனது உரையை நிறைவு செய்தார்.