விழுப்புரம்: ரெயில்வே மேம்பாலத்தில் விபத்து - 2 பேர் பலி
விழுப்புரம் அருகே உள்ள அய்யூர் அகரம் ரெயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்ட தொடர் வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த சொகுசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. இதையடுத்து பேருந்தை நிறுத்த ஓட்டுநர் முயன்றபோது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த கார் மற்றும் டெம்போ வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன் பின் ஒன்றாக மோதி தொடர் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த விழுப்புரம் மாவட்டம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பூபதி மற்றும் காரில் இருந்த சென்னை முடிச்சூரைச் சேர்ந்த 55 வயதான ஜான் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த விழுப்புரம் போலீசார் மற்றும் பொதுமக்கள், சேதமடைந்த வாகனங்களில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
காயமடைந்த லாசர், சாலமன் மற்றும் கார் ஓட்டுநர் பாலாஜி ஆகியோர் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து தொடர்பாக விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.