விநாயகர் சதுர்த்தி பண்டிகை... 254 சிறப்பு ரெயில்களை இயக்கும் கொங்கன் ரெயில்வே
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் 254 சிறப்பு ரெயில்களை இயக்க கொங்கன் ரெயில்வே திட்டமிட்டுள்ளது.நாடு முழுவதும் செப்டம்பர் 14-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். அதேபோல், பெருநகரங்களில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்கவும் பலர் பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு பயண நெரிசலை சமாளிக்கும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து தெற்கு கோவாவில் உள்ள கொங்கன் ரெயில்வே துணைப் பொது மேலாளர் பாபன் கட்கே கூறியதாவது:மொத்தம் 254 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் மத்திய ரெயில்வேயுடன் இணைந்து 246 ரெயில்கள் செப்டம்பர் 11 முதல் 27-ஆம் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும்.மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்தில் இருந்து சாவந்த்வாடி, ரத்னகிரி, மட்காவ் மற்றும் மங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். லோக் மானிய திலக் முனையத்தில் இருந்து ரத்னகிரி, மட்காவ், மங்களூரு ஆகிய பகுதிகளுக்கும் சிறப்பு ரெயில் சேவை வழங்கப்படும்.மேலும், புனேவில் இருந்து ரத்னகிரி மற்றும் சாவந்த்வாடி ஆகிய இடங்களுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.மேற்கு ரெயில்வேயுடன் இணைந்து மேலும் 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
மும்பை பாந்த்ரா முனையம், குஜராத்தில் உள்ள வதோதரா, விஸ்வாமித்ரி, வல்சாத் மற்றும் மகாராஷ்டிராவின் புசாவல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இருந்து இந்த சேவைகள் இயக்கப்பட உள்ளன.சிறப்பு ரெயில்கள் வெவ்வேறு தேதிகளில் இயக்கப்படுவதால், பயணிகள் தேசிய ரெயில் விசாரணை அமைப்பு மற்றும் கொங்கன் ரெயில்வே செயலி மூலம் தங்களுக்குத் தேவையான ரெயிலின் தேதி மற்றும் நேரத்தை அறிந்துகொள்ளலாம்.அனைத்து சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. எனவே, பயணிகள் வழக்கமான ரெயில்களை மட்டுமே எதிர்பார்க்காமல், தங்களது பயண வசதிக்காக கொங்கன் ரெயில்வேயின் சிறப்பு ரெயில்களில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.