மேகதாது அணை விவகாரத்தில் உடனடி சட்ட நடவடிக்கை அவசியம்: பெருந்தலைவர் மக்கள் கட்சி வலியுறுத்தல்
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஏஎஸ்ஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் புழல் ஏ. தர்மராஜ் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கட்சியின் செயல்பாடுகள், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.கூட்டத்தின் இறுதியில் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலன் வழங்கிய விளக்க உரையைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.அதில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை அமைக்க மேற்கொண்டு வரும் முயற்சியை தடுக்க தமிழக அரசு உடனடியாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பகுதி, குறிப்பாக தஞ்சை விவசாயப் பகுதிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு தலையிட வேண்டும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளில் அவரது சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்-அமைச்சர் விஜய்க்கு கூட்டம் பாராட்டு தெரிவித்தது. அதேபோல், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறும் காமராஜரின் நினைவு நாளிலும் கிண்டியில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்துமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பனைத் தொழிலாளியின் இல்லத்துக்குச் சென்று அவரை ஊக்குவித்த நிகழ்வை குறிப்பிட்ட கூட்டம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியில் இருப்பதைப் போல தமிழ்நாட்டிலும் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் மற்றும் பதநீர் இறக்கி விற்பனை செய்ய பனைத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டது.அதேபோல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இருந்த காலை உணவுத் திட்டத்தை, வரும் செப்டம்பர் 15 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தியதற்கும், அந்தத் திட்டத்திற்கு “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” என பெயரிட்டதற்கும் தமிழக அரசுக்கும் முதல்-அமைச்சர் விஜய்க்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசு நடத்திய நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பான முறைகேட்டை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, டெல்லி காவல்துறை தண்ணீர் பீய்ச்சி மற்றும் தடியடி நடத்தியதில் மாணவி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தையும் கூட்டம் கடுமையாக கண்டித்தது.கூட்டத்தின் நிறைவில் விழுப்புரம் மாவட்டத் தலைவர் எஸ்.எஸ். செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.